அவுஸ்திரேலியாவில் பெண் விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இருபது20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தனர்.
அவுஸ்திரேலிய யுவதி முறைப்பாடு
இதன்போது, தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நவம்பர் 17 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் 200,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்,
இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கைபெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி டோனிங் சென்ரர் நீதிவான் டேவிட் பீரிஸ் இன்று ஒத்திவைத்தார்.
அதேவேளை தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. பெப்ரவரி 23 ஆம் திகதி அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜரானால், தனுஷ்க நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலிகள் பயன்படுத்த தடை
எனினும், தனுஷ்க குணதிலக்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் டேட்டிங் செயலிகள் எதனையும் பயன்படுத் சிட்னி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் தனுஷ்க குணதிலக்க ,இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் செல்வதற்கும் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.