ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் நபர்கள் நிலையான தீர்மானங்களை எடுப்பதில்லை மற்றும் அவர்கள் பின்பற்று இரட்டை நிலைப்பாடுகள் காரணமாக அந்த கட்சியின் உறுப்பினர் கடும் வெறுப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.
பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை திட்டமிட்டு நடத்தும் ஏற்பாடுகளை காணமுடியவில்லை
புத்தாண்டில் நடைபெறவுள்ள பண்டாரநாயக்க நினைவு தினம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதை காணக்கூடியதாக இல்லை என சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு தினம் ஜனவரி 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை கட்சியின் தலைமையகத்தில் நடத்துவது குறித்து தற்போது பேசி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் பண்டாரநாயக்க நினைவு தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் நடத்தப்படும். இம்முறை அந்த இடத்தில் பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வை நடத்த கட்சியில் இருந்து விலகி சென்றுள்ள 11 பேரின் அணி ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் முடிவுகளை மீறி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும் இதுவரை அது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியடைய காரணமாக அமைந்துள்ளது.
கட்சியின் முடிவுகளை மீறி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டவர்களுக்கு எதிராக குறைந்தபட்சம் கடிதங்கள் கூட அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்கள் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து மாத்திரம் நீக்கி விட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பிலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.