கொழும்பில் வர்த்தகர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

0
295

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் ஹோட்டலின் கதவைத் தட்டி முதலில் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் திடீரென கதவை திறந்து ஹோட்டலுக்குள் நுழைந்து உரிமையாளரின் மார்பில் 04 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொஹமட் பருஷான் என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.