ஈரான் போராட்டங்கள் தொடர்பாக முதல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஈரானில் மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உயிரிழந்த சம்பவம் ஈரானில் கடந்த 2 மாதங்களாக போராட்டங்களை ஏற்படுத்தியது.
மக்களின் கொந்தளிப்பு நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சீனாவுக்கு அடுத்து ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நாடாக ஈரான் இருக்கிறது என்று Amnesty International அமைப்பு கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அரசாங்கக் கட்டடத்தை எரித்தது, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, அவருக்கு தெஹ்ரானிலுள்ள (Tehran) நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
அதேவேளை தெஹ்ரானிலுள்ள மற்றொரு நீதிமன்றம் மேலும் ஐவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு ஈரான் நீதித்துறை மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று இம்மாதத் தொடக்கத்தில் அந்நாட்டுச் சட்ட வல்லுநர்களில் 272 பேர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அதிகாரபூர்வத் தகவல்களின்படி குறைந்தது 20 பேர் மரண தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக ஈரானின் மனித உரிமைக் குழுத்தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் மரண தண்டனை அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு விடுமோ என்ற கவலையும் இருப்பதாக அவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும் ஈரானில் இடம்பெற்ற அண்மை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 750 க்கும் அதிகமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.