சமூக ஊடகமான வட்ஸ் அப் குழுவை உருவாக்கி, பேராதனை பல்கலைகழகத்தில் இணை மருத்துவப்பீடத்தின் புதிய மாணவர்கள் சிலருக்கு அழைப்புகளை எடுத்து ஆபாச காட்சிகளில் தோன்றுமாறு கூறி பகிடிவதையில் ஈடுபட முயற்சித்த மாணவர்கள் சிலர் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்க பாதுகாப்பு அதிகாரிகள் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இணை மருத்துவப்பீடத்தில் இணையத்தளம் வழியாக தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு, அந்த பீடத்தை சேர்ந்த சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் இவ்வாறு பகிடிவதை கொடுக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
காணொளிகளை விரிவுரையாளரிடம் கையளித்துள்ள மாணவர்கள்
சம்பவம் தொடர்பாக மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் வழியாக முறைப்பாடு செய்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் இணை மருத்துவப்பீடத்தின் ஒழுக்க கட்டுப்பாட்டு விரிவுரையாளரிடம் கையளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளும் மத்திய மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் கணனி குற்ற விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.