5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து திருகோணமலை மருத்துவர்கள் சாதனை!

0
625

திருகோணமலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் முறையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவருக்கு உணவுக் கால்வாயில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக 20 வருடங்களாக கண்டி, கொழும்பு, குருநாகல் போன்ற வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் சிகிச்சைகளுக்காக வேறு வைத்திய சாலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் மீண்டும் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நோயாளியை திருகோணமலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் கே.ஜெயந்தன் பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனை

நோயாளி கடந்த 20 வருடங்களாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளதுடன், உணவு கால்வாயில் சுருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை மேற்கொண்டால் சீர் செய்ய முடியும் எனவும் சத்திர சிகிச்சை நிபுணர் கே.ஜெயந்தன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண்ணிற்கு நேற்று (01) உணவு கால்வாயில் உள்ள சுருக்கத்தை சீர்செய்யும் சத்திர சிகிச்சை கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் தடவையாக ஐந்து மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்ணியா தள வைத்தியசாலையில் தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் குறைந்து காணப்படும் இவ்வாறான நிலையில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.