வவுனியா பிரமிளா படுகொலை; சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
422

வவுனியாவில் 21 வயதான இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்திருந்தார்.

29 வயது இளைஞர் கைது

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், உயிரிழந்த பெண் வசித்து வந்த நெடுங்கேணி பிரதேசத்தில் யுவதியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்தவராவார்.

வவுனியா பிரமிளா படுகொலை; சந்தேகநபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Massacre Of Vavunia Teens

உயிரிழந்த யுவதி தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், அவரது தாயார் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த யுவதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி இலக்கங்களின் தரவு அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.