யுக்ரைனிய தேசாபிமான பாடலைப் பாடியமைக்காக கிரைமிய அழகுராணி ஒருவருக்கு ரஷ்ய சார்பு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
யுக்ரைனின் ஒரு பிராந்தியமாக இருந்த கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கடந்த மே மாதம் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான ‘திருமதி கிரைமியா 2022 அழகுராணி போட்டியில் ஒல்கா வலேயேவா (Olga Valeyeva) எனும் 34 வயது பெண் முடிசூட்டப்பட்டிருந்தார்.
இவர் அண்மையில் ‘ஒய் யு லுஸி செர்வொனா கலினா’ எனும் யுக்ரைனிய தேசாபிமான பாடலை தனது நண்பி ஒருவருடன் இணைந்து பாடும் வீடியோவை வெளியிட்டார்.
அதையடுத்து தீவிரவாத குறியீடுகளை ஊக்குவித்ததாக இவர்கள் இருவர் மீதும் கிரைமியாவின் ரஷ்யா சார்பு அதிகரிகளால் சுமத்தப்பட்டது. இப்பாடலைப் பாடியமைக்காக இரு யுவதிகளும் மன்னிப்பு கோரினர்.
இவர்கள் மன்னிப்பு கோரும் வீடியோவை கிரைமியாவின் உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்தது. தான் யுக்ரைனிய பாடலொன்றை பாடியதாகவும் அதன் உள் அர்த்தத்தை தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஒல்கா வலேயேவா(Olga Valeyeva) தெரிவித்துள்ளார்.
ஒல்காவின் (Olga Valeyeva) நண்பிக்கு 10 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒல்கா வலேயேவா (Olga Valeyeva) ஒரு தாய் என்பதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படாமல் 40,000 ரூபிள் (சுமார் 2.4 லட்சம் இலங்கை ரூபா, சுமார் 55,000 இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வொலோடிமிர் அன்டனோவிச் (Volodymyr Antonovich) என்பவரால் 1875 ஆம் ஆண்டு இப்பாடல் வெளியிடப்பட்டது.
இப்பாடல் யுக்ரைனியர்களின் சுதந்திர அபிலாஷையை வெளிப்படுத்துவதால், 1919 முதல் 1991 ஆம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக யுக்ரைன் இருந்தபோது அப்பாடலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.