கொழும்பு திருட்டுகும்பல் அதிரடி கைது!

0
405

கொழும்பிலுள்ள தலவத்துகொட பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த இரு பெண்கள் உட்பட ஐவர் அடங்கிய கும்பல் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதுடன் கடுமையாக தாக்கியுள்னர். அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாடகைக்கு வீடு பெற்றுக் கொள்வதாக கூறி முன்னெடுக்கப்பட்ட கொள்ளை சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த ஐவரில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இரு பெண்கள் உட்பட ஐவர் அதிரடி கைது! | Five People Two Women Caused A Stir In Colombo

7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேராதனை பிலிமதலாவ மற்றும் தொம்பே பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாட்டாளரின் கடையொன்றை வாடகை அடிப்படையில் பெற்று உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையிடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி மருதானையில் உள்ள தங்கக் கடையொன்றிற்கும் மற்றுமொரு பகுதி பேராதனையில் உள்ள அடமான நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.