ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சகோதரனின் நினைவிடத்தில் தனது கூந்தலை வெட்டி வீசி போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இளம் பெண் ஒருவர்.
ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாவத் ஹெய்தாரி என்பவர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது நினைவிடத்தில் திரண்ட பெண்கள், ஜாவத் ஹெய்தாரியின் சகோதரி உட்பட பலர் ரோஜாப் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பின்னர் ஜாவத் ஹெய்தாரியின் சகோதரி மட்டும் ஒரு கத்தரிக்கோலை எடுத்து தனது கூந்தலை கத்தரித்து சகோதரன் நினைவிடத்தின் மீது வீசினார். இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.
கூந்தலை வெட்டி வீசுவதால் ஈரான் பெண்கள் தங்களின் சோகத்தையும், கோபத்தையும் அரசுக்கு தெரிவிக்கின்றனர் என்று ஈரான் பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான மாஷி அலினேஜத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. பொலிசார் முன்னெடுத்த துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.