வெயங்கொட பகுதியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த குடும்ப பெண் 20 வருடங்களுக்கு முந்தைய அவரின் காதலனாலேயே கொல்லப்பட்டிருக்கலாம். என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக காதல் முறிந்ததைத் தொடர்ந்து பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளதோடு, அவர்களுக்கு 9 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

உயிரிழந்த பெண் வத்துபிட்டிவல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.
பழிவாங்கிய பழைய காதலன்
இந்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பழைய காதலன், கடந்த சில வருடங்களாக இவருடன் தொடர்புகொள்வதற்கு முயற்சித்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
எனினும் பெண் அதனை நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்குவதற்கு சந்தேகநபர் தீர்மானித்தே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த அத்தனகல்ல பொலிஸார், தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.