இரு பெண்களின் பசுவினை களவாடிச் சென்ற புத்தளம் நகர சபை உறுப்பினர் கைது

0
478

புத்தளம் பகுதியில் பசுவொன்றை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேய்ச்சலுக்காக சென்று திரும்பி வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த பசுவொன்றே இரவு வேளையில் களவாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலரினால் தங்களது பசுவொன்று களவாடப்பட்டுள்ளதாக பெண்கள் இருவர் புத்தளம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பசுவினை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கடத்துவதற்கான உத்தரவினை பிறப்பித்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக கைது செய்யப்பட்டவர் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் என்பதோடு அவருக்கு புத்தளம் நகரத்தில் மாட்டிறைச்சி கடையொன்றும் காணப்படுவதாக விசாரணைகளில் அறிய கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.