சிறு பிள்ளைத்தனமான சைக்கிள் கட்சியினருடன் சென்று ஜனாதிபதியை சந்திக்க தான் விரும்பவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடக சந்திப்பில் விக்னேஸ்வரனிடம் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ள நிலையில் தங்களையும் சந்திப்பதற்கான திகதி வழங்கப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சீ.வி.விக்னேஸ்வரன் தனக்கும் அழைப்பு கிடைத்தது எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கான திகதி செயலக அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டது.
என்னுடன் சந்திப்புக்கு சைக்கிள் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அழைப்பதாக தெரிவித்தனர். எனினும் சிறு பிள்ளைத்தனமான செயற்பாடுகளை உடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்திப்பது சாதகமாக எனக்குத் தெரியவில்லை என்றார்.
அதோடு கயேந்திரகுமார் எதற்கெடுத்தாலும் முடியாது, வரமாட்டோம், சரி வராது என பேசுபவர்களுடன் நானும் இணைந்து சந்திப்பது பரிசீலிக்க வேண்டிய விடயம் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் சந்திக்கும்போது நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பேச இருக்கிறேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவுடன் பேசி இருக்கிற நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறள்ள சந்திப்பின்போது பேசி சாதகமான முடிவு ஒன்றை எடுக்க முயற்சிப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.