தைவான் சென்ற நான்சி பெலோசியின் (Nancy Pelosi) விமானம் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெயரை தன்வசமாகியுள்ளது.
அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த திங்கட்கிழமை (01-08-2022) தொடங்கினார்.
தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்தது.
எனினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி நேற்று விமானம் மூலம் தைவானுக்குச் சென்றார். நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன. மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன.
இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது.
பிளைட் ரேடார் 24 (FlightRadar24) என்ற விமான கண்காணிப்பு இணையதளம் மூலமாக விமானங்களை பின்தொடர்பவர்களை கண்காணிப்பது வழக்கம்.
இந்த இணையதளம் மூலமாக சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் நான்சி பெலோசி பயணம் செய்த விமானத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக நேற்று கவனித்தனர். இதனால் அதிகம் பேரால் கவனிக்கப்பட்ட விமானமாக இது மாறியது.