அன்று இந்தியாவுடன் இணைந்திருந்தால் இன்று நாட்டில் எரிபொருள் வரிசை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி ரணில் முன்னைய அரசாங்கத்தை சாடியுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்துக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர்.
ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவியது. இந்திய பிரதமர் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கம் எமக்கு வழங்கிய உதவி, வாழ்வதற்கானதொரு சுவாசம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இந்திய பிரதமர், இந்திய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் இதன்போது தெரிவித்தார்.