இலங்கையின் அவல நிலை… பலரையும் வேதனையில் ஆழ்த்திய சம்பவம்

0
412

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே செல்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்பினை பணவசதி படைத்தவர்கள் சமாளித்துக் கொண்ட போதும், மத்திய மற்றும் நாளாந்த சம்பளம் பெறும் தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்டு வந்த மக்கள் தற்போது ஒரு நேரம் மட்டும் அளவாக உணவு உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சமகாலத்தில் மிகவும் ஏழ்மையான வயோதிப தம்பதியின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் சம்பவம் பதிவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தை சேர்ந்த வயோதிப தம்பதி சற்று தூரத்திலுள்ள பிக்கு ஒருவரை சந்திக்க சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த தம்பதி அங்கிருந்த உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த உணவுகளின் விலைகளை ஒவ்வொன்றாக விசாரித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களுக்கு அந்த விலைக்கு உணவினை பெற்றுக்கொள்ள முடிவில்லை. மிகவும் குறைந்த விலையில் இருந்த சிறிய பனிஸ் ஒன்றையும் தேனீர் ஒன்றை வாங்கியுள்ளனர். அதனை இருவரும் பிரிந்து பசியாறியுள்ளனர்.

குறித்த வயோதிப தம்பதியின் செயற்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அவர்களிடம் சென்று உணவு வாங்கித் தர உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அதனை அவர்கள் மறுத்துள்ளனர். அதற்கு பதிலளித்தவர்கள் “வேண்டாம் நாங்கள் வீடு திரும்ப நேரம் போதாமல் போய்விடும். காலையில் எங்களுக்கு இடியாப்பம் கிடைத்தது. பகல் பசிக்கவில்லை. இரவு வீட்டிற்கு சென்று ஏதாவது செய்து கொள்கிறோம். நன்றி” என அவர்கள் கூறியுள்ளனர்.

தங்களிடமிருந்து சில 20 நாணயத்தாள்களை கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் அவர்களை பார்த்து மிகவும் வேதனையடைந்த அந்த பெண், 5 நிமிடங்கள் பொறுத்திருங்கள் என்று கூறிவிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றை கொள்வனவு செய்து கொடுத்ததுடன் அவர்களின் கையில் 3000 ரூபாய் பணத்தையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.

சில 20 ரூபாய் நாணயத்தாள்களை மட்டும் தம்வசம் வைத்திருந்த வயோதிப தம்பதியிடம் வார்த்தைகள் வரவில்லை.

அந்த நேரத்தில் அவர்கள் வடித்த கண்ணீர் அவர்களின் வலியின் கொடுமை வெளிப்படுத்தியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தம்பதி கண்ணீருடனே தமது இல்லத்தை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்று இலங்கையின் பல பகுதிகளில் எவ்வளவு குடும்பங்கள் உணவு இன்றி தவித்து வருவார்கள்.

முடிந்தவரை அயலவர்களுக்கு உள்ளதை கொடுத்து பசியை போக்குவோம் என குறித்த பெண் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.