ராஜபக்சக்களுக்கு எதிராக கனேடிய அரசிடம் கோரிக்கை விடுத்த அந்நாட்டு எம்.பி!

0
570

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “முன்பை விட இன்று, அட்டூழியங்களைச் செய்யும் தலைவர்கள் கணக்குக் காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறைகளை சர்வதேச சமூகம் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் தொடர்ச்சியான தோல்விகள் சர்வதேச தண்டனையின்மைக்கு வழிவகுத்தன.

அத்துடன், ராஜபக்ச சகோதரர்கள் போன்றவர்கள் சுதந்திரமாக உலாவ அனுமதித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களில் பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவர் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இராணுவத் தாக்குதலை சகோதரர்கள் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதித்தமை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உலகளாவிய அதிகார வரம்பிற்குட்பட்ட கோட்பாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு அங்குள்ள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனந்தசங்கரி வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பல கோரிக்கைகளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இலங்கையில் குற்றங்களைச் செய்தவர்களை அவர்களின் உள்ளூர் அதிகார வரம்பிற்குள் நடைமுறைப்படுத்தவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆனந்தசங்கரி மேலும் கூறினார்.