கனடா நகரில் மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்களால் சேதம்

0
619

கனேடிய நகரம் ஒன்றில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை ஒன்று மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Richmond Hill நகரிலுள்ள கோயில் ஒன்றில் மகாத்மா காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது.

அந்த சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரொரன்றோவின் இந்தியத் துணைத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றில், Richmond Hill இல் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைகிறோம்.

இந்தக் குற்றச்செயல் வெறுக்கத்தக்கச் செயல். கனடாவிலுள்ள இந்தியச் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா காவல்துறையுடன் பேசியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் யார்க் பகுதி பொலிஸ் செய்தித் தொடர்பாளரான Amy Boudreau, ’இனம், தேசியம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம், பாலின அடையாளம் போன்றவற்றின் அடிப்படையில் பிறரைத் துன்புறுத்துபவர்களை யார்க் பகுதி காவல்துறை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ளாது. வெறுப்புக் குற்றங்களின் சமூகம் தழுவிய தாக்கத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

மேலும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புச் சார்பு சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் தீவிரமாக விசாரித்தும் வருகிறோம். மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள்’ என்று கூறியிருக்கிறார்.