பாரிஸில் நடைபெற்ற தமிழ் அமைப்புகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

0
438
France, Paris, French flag flying over the Seine with Eiffel Tower in the background

உத்தியோகபூர்வ சந்திப்பு

பிரான்ஸ் தமிழர் வர்த்தக மையமான லாச்சப்பல் பகுதி பரிஸ் 10ம் வட்டார காவல்துறை ஆணையாளருக்கும் தமிழர் அமைப்புக்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு 11-07-2022 திங்கட்கிழமை இடம்பெற்றது.

இலங்கை – இந்திய வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் லாச்சப்பல் தமிழர் வர்த்தக பகுதியினை மையப்படுத்தி பல்வேறு சமூக – அரசியல் விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

லாச்சப்பலுக்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் களவுகள், வழிப்பறிகள் பற்றி முக்கியவிடயமாக பேசப்பட்டன.

ஆசிய நாட்டவர்களின் வருகை காரணமாக இடம்பெறும் சட்டவிரோத சிகரெட் விற்பனைகள் உட்பட சட்டவிரோதமான செயல்கள் காரணமாக தமிழ் வர்த்தகர்களுக்கு ஏற்படுத்துகின்ற விளைவுகள் மற்றும் பொதுச்சூழலுக்கு ஏற்படுத்துகின்ற அசாதாரண நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும்

தமிழ்த்தேசிய நிகழ்வுகளுக்கான அறிவிப்பு சுவரொட்டிகளின் அவசியம் தொடர்பிலும் தமிழர்களின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் ஆணையாளரின் கவனத்துக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அறிவித்தல் சுவரொட்டிகளுக்கான பொதுவான அறிவிப்பு பலகையொன்று லாச்சப்பல் பகுதியில் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தலைமுறையினை கடந்து பிரென்சு தேசத்தின் குடிமக்களாக அதன் சட்டதிட்டங்களுக்க மதிப்பளித்து பிரென்சு தேசம் வழங்குகின்ற உரிமைகளின் வழியே பிரான்ஸ் தமிழ்சமூகத்தின் அடையாளமாக ‘லாச்சப்பல் தமிழர் வர்த்தக பகுதி’ அமைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியதொரு தொடக்கமாக நட்புரீதியாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் தொடர்பாடலை வலுப்படுத்தி தொடர்சியாக சந்திப்புக்களை நிகழ்த்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை – இந்திய வர்த்தக சங்கம், C’est Nous Tamouls தமிரர்களின் குரல் (VOT), தமிழ் பண்பாட்டு வலையம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல் துறை ஆகிய அமைப்புகள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.