பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விழுப்புரம் அருகே இடம்பெற்றுள்ளது.
விழுப்புரம் – செஞ்சி அருகேயுள்ள அன்னியூரைச் சேர்ந்த 22 வயதான பிரதீபா என்ற இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதீபாவும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை காதலித்து கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரதீபா – விஜயகுமார் தம்பதியர் இரவு திருவாமாத்துார் விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஸ்தா சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குச் சென்றபின் இரவு 11.30 மணியளவில் பிரதீபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பதறிப்போன குடும்பத்தினர் பிரதீபாவை முண்டியம்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் பிரதீபா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையில் குவிந்தனர்.
பிரதீபாவின் தந்தை பழனிவேல் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆர்.டி.ஓ தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து விழுப்புரம் புறவழிச்சாலையில் பிரதீபா சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, குளிர்சாதப்பெட்டியில் வைத்திருந்த வேகவைத்த சேமியாவை கைப்பற்றி அழித்தனர். மேலும், வெள்ளை நிற பாஸ்தாவை உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பிரதீபாவுக்கு இதய நோய் இருந்ததால் அவர் மாத்திரை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
எனவே பிரதீபாவின் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே அவர் பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது இருதய பாதிப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.