இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகபெரும் மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி (புதன்கிழமை) தனது பதவி விலகலை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் நாட்டில் மேலும் அமைதியின்மை ஏற்படக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நேற்று மாலைக்குள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தீர்மானித்திருந்தார் என செய்தி வெளியாகியிருந்தது.
ஆனாலும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே கோட்டாபய தனது பதவி விலகலை பிற்போட்டுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
திட்டமிட்டபடி ஜனாதிபதி நேற்று பதவி விலகியிருந்தால் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானாகவே பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
இந்நிலையில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கவே, கோட்டாபய கால அவகாசத்தை கோரியுள்ளார்.
நேற்றைய தினம் (09-07-2022) ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என பல தரப்பினராலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.