ஜனாதிபதி மாளிகையில் ரகசிய அறை கண்டுபிடிப்பு!

0
595

இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் வெடித்திருந்த நிலையில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகை முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடிகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட சுமைதூக்கி (Lift) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் வலுவான இரும்பு கதவுகளால் திறக்க முடியாத அளவிற்கு இந்த இரகசிய அறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த அறையின் கதவு இதுவரையில் திறக்க முடியவில்லை எனவும் ஏதேனும் முக்கிய அம்சங்கள் அல்லது விடயங்கள் அதில் இருக்கலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இரகசிய அறை மிகவும் குளிரூட்டப்பட்ட அறையாக அமைக்கப்பட்டுள்ளது. அறையின் இரும்பு கதவின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளி ஊடாக வரும் குளிர் காற்றின் ஊடாக அதனை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.