தமது உரிமைகளை வெல்வதற்காக அரசியலமைப்பூடாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பயன்படுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (09-07-2022) அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று (06-07-2022) பிற்பகல் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
‘ஜூலை 9 – முற்பகல் 9.00 மணி – கொழும்பு ‘ எனும் தொணிப் பொருளில் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஸ்ரீ நாத் பெரேரா, சரத் ஜயமான்ன, உபுல் ஜயசூரிய உள்ளிட்டோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும, நுவன் போப்பகே உள்ளிட்ட சட்டத்தரணிகலும் ஊடகங்கள் முன் கருத்து வெளியிட்டனர்.
சட்டத்தரணி நுவான் போபகே வெளியிட்ட கருத்து,
‘அவர்கள் அவர்களுடைய அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இப்போது நாமனைவரும் ஒன்றிணையவேண்டும். நாங்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும்‘ என தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்து வெளியிடுகையில்,
‘தற்போதைய சூழ்நிலையில் அதிகாரத்தைக் கைவிட்டால் தாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவோம் என்பதை ராஜபக்ஷ குடும்பத்தினர் நன்கறிவார்கள். ஆகவே நாமனைவரும் ஒன்றிணைந்து அவர்களைத் துரத்தியடிப்போம்’ என்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய கருத்து வெளியிடுகையில்,
‘வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசெல்லப்படக்கூடிய நிலையிலிருந்து இப்போது அவர்கள் மரணிக்கும் நிலை வந்தாலும்கூட அடுத்த இரண்டு நாட்கள் தாம் நிலைத்திருக்கக்கூடிய மீயுயர் சட்டங்களை ராஜபக்ஷாக்கள் கொண்டு வருவர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன கருத்து தெரிவிக்கையில்,
‘தற்போதைய அரசாங்கத்தின் நியாயத்துவம் இல்லாமல் போய்விட்டது. எனவே மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவதற்கு உங்களின் உரிமைகளைப் பயன்படுத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்.
சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும கருத்து தெரிவிக்கையில்,
நாம் இந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம். இங்கு அனைத்தும் ஊழல் மற்றும் குற்றங்களின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது.
அவர்கள் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அனைத்தையும் செய்கின்றார்கள். எனவே நாமனைவரும் ஒன்றிணைவதன் மூலம் அவர்களைத் தோற்கடிக்கமுடியும் ‘ என்றார்.