பிரித்தானியாவில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பழமைவாத கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பொறிஸ் ஜோன்சன் விலகவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவரின் பதவி விலகலின் பின் இந்தக் கோடையில் கொன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைப் போட்டி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. எனினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர் கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார். எனினும் கிறிஸ் மீது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் பதவி விலகினர்.
அத்துடன் சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோரும் தங்களது பதவியை விட்டு விலகிய நிலையிலேயே பொறிஸ் ஜோன்சனும் கொன்சவேட்டிவ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் ஜான்சன் எண் 10 டவுனிங் தெருவிற்கு வெளியே ராஜினாமா அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஜூலையில் ஜான்சன் பிரதமரான பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு வரலாற்று பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பொறிஸ் ஜோன்சன் பெற்றார். இந்நிலையில் பொறிஸ் ஜோன்சன் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளால் சிக்கித் தவிக்கிறது.