ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) சொந்தப் புத்தி இல்லையா? அல்லது புத்தியுள்ளவர்களை பக்கத்தில் வைத்திருப்பதில்லையா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் (Selvarajah Kajendren) கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் (05-07-2022) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கேள்வியை ஏழுப்பியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் போராளிகள் உட்பட , அரசியல் கைதிகள் பலர் இந்த அரசாங்கத்தால் ஆடுமாடுகள் போல நடாத்தப்படுகின்றனர். தற்போது வரை முன்னாள் போராளிகளுக்கு பின்னால் சி.ஐ.டியினர் திரிகின்றனர்.
நினைவேந்தல்களை நடாத்தினால் கைது செய்வோம் என எச்சரிக்கின்றனர்.
இந்த நிலைக்கு யார் காரணம். ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சொந்தப் புத்தி இல்லையா, அல்லது புத்தியுள்ளவர்களை பக்கத்தில் வைத்திருப்பதில்லையா. அண்மையில் குறுந்தூர் மலை விவாகரம் அவ்வாறு தான் அமைகிறது.
நாம் குண்டர்களை அங்கே கூட்டிக்கொண்டு செல்லவில்லை. அந்த இடம் ஒரு தொல்பொருள் சான்று. அதில் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை மீறி அங்கே தாது கோபுரம் அமைக்கப்படுகிறது. அதை தடுக்கவே நாம் அங்கே சென்றோம். ஆனால் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) புதுக்கதையை தற்போது கூறிக்கொண்டு திரிகிறார் என்றார்.