எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் தலைமையில் ஆராய்வு

0
557

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், நேற்றைய கலந்துரையாடலில், வங்கிக் கடனை மீள செலுத்தல் மற்றும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம், பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்றைய தினம் சுமார் 200 நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவக்கை எடுத்த நிலையில், இன்றைய தினமும் அந்தப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.