உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அப்போது அந்த வணிக வளாகத்தினுள் ஏறத்தாழ 1000 பேர் வரையில் இருந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தகவல் தெரிவித்திருந்தார்.
ஏவுகணை தாக்குதலால் அதிர்ந்து போன பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அருகில் உள்ள வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்களில் தஞ்சம் புகுந்தார்கள்.
கட்டிடத்தின் ஒரு பகுதி ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்தாகவும், 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 36 பேரை காணவில்லை.
இந்த ஏவுகணை தாக்குதல், ஐரோப்பிய வரலாற்றில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்று என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்த பிராந்தியத்தில் நேற்று துக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்கிடையே உக்ரைனுக்கு உதவிகளைத் தொடர்வது என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து உக்ரைன் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக்கூடி இதுபற்றி விவாதித்துள்ளது.