கோட்டாபய இருக்கும் வரை இலங்கையை நம்பி உதவிட உலகம் தயாரில்லை எனவும், நாட்டின் விடிவுக்கு வழிவிடாது ஏன் நந்தி மாதிரி வழி மறித்துக் கொண்டு பதவியில் கோட்டாபய விடாப்பிடியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சினம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படுவதால் ஜூலை 10 வரை நாடு ஏறக்குறைய முடக்கல் நிலையை அடைகிறது. ஆனால் ஜூலை 10த்திற்குப் பிறகும் ஏதும் மாற்று திட்டம் இருக்கின்றதா? என கோடாபயவால் சொல்ல முடியவில்லை. ஆகவே இந்த முடக்கம் ஜூலை 10த்திற்குப் பிறகும் தொடரும் எனத் தெரிகிறது.
“இருக்கும் அந்நிய செலாவணியை பயன்படுத்தி எரிபொருள் இறக்குமதியை செய்யுங்கள்” என மத்திய வங்கி ஆளுநருக்கு சொல்லத்தான் இவரால் முடிகிறது.
இதை சொல்ல ஒரு ஜனாதிபதி வேண்டுமா? நாட்டில் அந்நிய செலாவணி இல்லை என்பதுதானே பிரச்சினையே? இப்போதுதான் ரஷ்யாவுக்கு ஒரு அமைச்சரை ஓட்டி விட்டு இங்கே இந்தியா, அமெரிக்காவிடம் இவர் கையேந்தி நிற்கிறார். ஆனால் அன்றாட உதவிகள் ஆங்காங்கே வருகின்றனவே தவிர அடிப்படை உதவிகள் தர யாரும் தயாரில்லை.
அதாவது, கோட்டாபய இருக்கும் வரை இலங்கையை நம்பி உதவிட உலகம் தயாரில்லை. இந்நிலையில் ஏன் நந்தி மாதிரி வழி மறித்துக்கொண்டு பதவியில் விடாப்பிடியாக இவர் இருக்கிறாரோ தெரியவில்லை.
இலங்கையின், இன்றைய படுநெருக்கடி நிலைமைக்கும் இயல்பு நிலை திரும்புவதற்கு இடையில் நிற்கும் நந்திதான் கோட்டாபய ராஜபக்ஷ என மனோகணேசன் எம்.பி காட்டமாக பதிவிட்டுள்ளார்.