தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை வாங்க மறுத்த மக்கள்!

0
378

இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் நேற்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டப்பகுதியில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என திம்புள்ள மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களில் வாழும் மக்கள் வலியுறுத்தினர்.

தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திம்புள்ள பிரிவில் உள்ள ஏனைய 3 பிரிவுகளுக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

நேற்று திம்புள்ள அப்பர் (மேல்) மற்றும் லோவர் (கீழ்) டிவிசனில் உள்ள மக்களுக்கு அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி அதிகாரி அலுவலகம் ஊடாக விநியோகப்பணி இடம்பெற்றது. அப்பர் டிவிசனில் 96 குடும்பங்களும், லோவர் டிவிசனில் 367 குடும்பங்களும் வாழ்கின்றன.

மொத்தம் 460 குடும்பங்களுக்கு நிவாரணம் தேவை என்ற நிலையில் 225 குடும்பங்களே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதுவும் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் குழம்பினர். பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஏன் இவ்வாறு ஓரவஞ்சணை காட்டப்படுகின்றது என கேள்வி எழுப்பினர்.

அனைவருக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களும் நிவாரணம் வாங்க மறுத்தனர். ” பொருளாதார நெருக்கடியால் நாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அரிசி என்றால், நாங்கள் மண்ணையா உண்பது” – என மக்கள் தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினர் . ” முதற்கட்டமாகவே இந்த தேர்வு இடம்பெற்றது. இரண்டாம் கட்ட நிவாரணம் வந்ததும், அனைவருக்கும் வழங்கப்படும்.” என நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.