வடமாகாண மருத்துவர்கள் சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்!

0
418

வடமாகாணத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனை கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

சம்பளம் வழங்கப்படாமல் விடுவது தொடர்பாகவோ சம்பளம் குறைப்பு தொடர்பாகவோ நிறுவனங்கள் முன்னரே அறிவிக்க வேண்டும் என்பது ஸ்தாபன விதி. ஆனால் அவ்வாறு எதுவும் பின்பற்றப்படாமல் இங்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

வடமாகாண மருத்துவர்கள் சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்!

அதேவேளை கடந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டு சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடிய போது அத்தியாவசிய தேவையான சுகாதார துறைக்கு சம்பளங்கள் குறைக்கப்படாது என வாக்குறுதியளிக்கப்பட்டது.

மிகவும் சிக்கலான காலத்தில் நாம் எதிர்கொண்டு சேவைகளைச் செய்யும் போது சம்பள குறைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவித்த அவர், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாம் எமது தாய்ச்சங்கத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலத்தில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.