ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல்!

0
478

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 முக்கிய பதவிகள் தொடர்பில் பிரேரித்த மூன்று பெயர்களுக்கு இதுவரை ஜனாதிபதி அனுமதியளிக்காமல் இருப்பதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு தினேஷ் வீரக்கொடியையும், மக்கள் வங்கி தலைவரான சட்டத்தரணி நிசங்க நாணயயக்காரவையும், இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோனால்ட் பெரேராவையும் நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது.

எனினும் அம்மூன்று பதவிகள் தொடர்பிலும் இதுவரை அந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சு பதவியில் கடமையாற்றும் நிலையில் அவரின் கீழான நிறுவனங்களில் எந்த நியமனங்களையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு முதித்த பீரிஸை தலைவராக நியமிக்கவும் பெரும் கஷ்டப்படவேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டதாகவும் குறித்த தகவல்கள் தெரிவித்தன.

தற்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பதவி எதிர்வரும் 30 ஆம் திகதி நீடிக்கப்பட வேண்டிய நிலையில், பிரதமரின் எந்த பிரேரிப்புக்களையும் ஜனாதிபதி கணக்கில் கொள்ளாது செயற்படுவதானது, இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் என அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.