இது காலத்தின் தேவை! உணர்ந்து கொண்டார் ஜனாதிபதி

0
600

வீட்டில் இருந்து பணிகளை நிறைவேற்றுவதைப் போன்று மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (15-06-2022) அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும்.

இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40 சதவீதம் அழிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அத்துடன், அரசுக்கு சொந்தமான பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பயிர்ச்செய்கை புரட்சிக்கு இணையாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திப் புரட்சியின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சூரியசக்தி மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய மின்சார நெருக்கடியை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நிறுவன ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.