யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பம்

0
1083

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் .

இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு இரவு நகர் சேர் கடுகதி புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபட உள்ளது.

இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட பொல்காவலை குருநாகல அனுராதபுரம் வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில் சுன்னாகம் ஊடாக காங்கேசந்துறையை சென்றடையும் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இங்கிருந்து காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து, 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, கம்பகா, மருதானை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளை சென்றடையவுள்ளது.

மேலும் பயணிகளிடம் ஒரு வழி கட்டணமாக நகர் சேர் கடுகதிக்குரிய கட்டணமாக 2,800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்த அவர் இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் கூறினார்.