யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை!

0
659

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை ஒன்று விரைவில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் (10-06-2022) வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக்குழு கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பி வைக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

இதன்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள், பதிவு நடவடிக்கைகள் என்பன சிங்கள மொழியில் பெருமளவில் முன்னெடுக்கப்படுவதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய அங்கஜன் இராமநாதன், இதனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்தோடு ஆரம்பகாலங்களில் ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற எமது இளைஞர்கள், அண்மைக்காலங்களில் குறிப்பாக தற்போதைய சூழலில் தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல், ருமேனியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, வடக்கு கிழக்கு தமிழ்பேசும் இளைஞர் யுவதிகளையும் சென்றடையும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்திய அவர்,

நடமாடும் சேவை முகாமொன்றை நடாத்தி பயிற்ச்சிகள், பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இக்கோரிக்கையை கருத்திலெடுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) அவர்கள், வடக்கு மாகாணத்துக்கான நடமாடும் சேவை முகாம்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விரைவில் முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, முதற்கட்டமாக வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு திட்டமொன்றை Zoom செயலியூடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்படும் பதாதைகள், அறிவிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.