இந்தியா சென்ற இலங்கையர் நாடகம் அம்பலம்

0
642

திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை விசாரணைக்காக மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த நபர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு பொலிஸார் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து மரைன், கியூ பிரான்ச் பொலிஸாரின், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில், அவர் விசா மூலம் கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் வந்துள்ளார்.

இவர் விசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய விசா காலம் இன்னும் 90 நாட்கள் உள்ளது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர் திருகோணமலையில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.