பசில் தொடர்பில் கடும் விசனம் வெளியிட்ட சனத் ஜயசூரிய

0
550

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

அத்துடன் , அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சனத் ஜயசூரிய, பசிலின் கருத்துக்கள் குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ‘ பசில் ராஜபக்ஷ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. நாட்டின் எதிர்காலம் பாழாகியுள்ளது. இதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்’ என சனத் ஜயசூரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார்.