பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!

0
559

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அமைப்புக்களும் இணைந்து எதிர்வரும் ஜுன் – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பு நிலை எத்தகையதாகக் காணப்படும் என்பது குறித்து வெளியிட்டுள்ள ‘பட்டினி மேலோங்கல் அபாய அறிக்கையிலேயே’ மேற்கண்டவாறு இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

இவ்வருடம் மேமமாதம் வெளியிடப்பட்ட ‘பட்டினி மேலோங்கல் அபாய அறிக்கையின்’ பிரகாரம் எதியோப்பியா, நைஜீரியா, தென்சூடான் மற்றும் யேமன் ஆகிய 4 நாடுகளும் பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளாகத் திகழ்வதுடன், குறிப்பிடத்தக்களவு அபாயம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இணைந்திருக்கின்றன.

எதியோப்பியா, யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 750,000 பேர் வரையில் பட்டினிக்கும் உயிரிழப்புக்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படக்கூடும்.

அதேவேளை கடந்த ஜனவரி மாதம் வெளியான அறிக்கையில் மிகமோசமடைந்துவரும் நிலைவரங்களின் காரணமாக உயர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளின் பட்டியலில் கொங்கோ, ஹெய்ட்டி, சாஹெல் பிராந்தியம், சூடான், சிரியா ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்ததுடன், தற்போதை அறிக்கையின் பிரகாரம் அப்பட்டியலில் கென்யாவும் இணைந்துகொண்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் அங்கோலா, லெபனான், மடகஸ்கார், மொஸாம்பியா ஆகிய நாடுகளுடன் தற்போது இலங்கை, மேற்கு ஆபிரிக்கா, உக்ரேன் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளும் இணைந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.