பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயது பெண் குழந்தை ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் நகரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த பெண் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது அந்த பெண்ணின் சகோதரியும் அவருடன் சென்றதாக தெரிகிறது.
ஆனால் அந்த பெண் சார்ந்த சமூகத்தினர் தங்கள் சமூகத்தை சேர்ந்த இரு பெண்களையும் மாற்று சமூகத்தினர் கடத்தி சென்றுவிட்டதாக கூறி வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பெண்ணின் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் பலர் மாற்று சமூகத்தினர் வாழும் பகுதிக்கு சென்று அவர்களின் வீடுகளை சூறையாடினர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தீவைத்து எரித்தனர். இதில் ஒரு வீட்டில் இருந்த 4 வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
காதல் பிரச்சனையில் 4 வயது பெண் குழந்தை ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.