ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் மனைவிக்கு தமிழில் ஆவணங்கள்

0
677

ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கெதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ்மொழி மூலம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு ஸஹ்ரானின் மனைவிக்கு தமிழில் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

கடந்த தவணையின் போது ஸஹ்ரானின் மனைவி சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கெதிரான சான்றாக முன்வைக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அவசியமென நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டுமெனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்குமெனவும் ஹாதியாவின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்து.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவிற்கெதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு, வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் யூலை மாதம் 21ம் திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.