பிரதமர்… நிதிஅமைச்சர்… அடுத்து ஜனாதிபதி ஆசனத்தில் ரணில் அமர்வார் !

0
724

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என்று முன்னர் கூறினேன் எனவும், அது இன்று நடந்து கொண்டிருக்கின்றதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்திருக்கின்றார்.

காலி பகுதியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போதே இதனை அவர் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்து நான் ரணில் நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டேன்.

அதாவது ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ரணில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் என்று நான் கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இன்று ரணில் பிரதமராகிவிட்டார்.

நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும்.

அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபா இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவும் மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது.

அப்படி காலியான வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார். சிறிய தாமதம் ஏற்படும். ஆனால் பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள்.

பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைப்பார் என்றும் வஜிர‍ அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.