சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறையை எளிதாக்கியுள்ள சுவிஸ் மாகாணம்!

0
691

சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்றிலுள்ள மக்கள், வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பு ஒன்றில், அம்மாகாண வாக்காளர்கள், வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கும் நடைமுறைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

69.1 சதவிகிதம் வாக்காளர்கள் வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கும் நடைமுறைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

சூரிச்சில் சுமார் 350,000 வெளிநாட்டவர்கள் வசிக்கும் நிலையில், அவர்கள் குடியுரிமை பெறுவதை எளிதாக்க மக்கள் எடுத்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, குடியுரிமைத் தேர்வு முதலான விடயங்கள் இனி அம்மாகாணத்தில் 162 முனிசிபாலிட்டிகளிலும் ஒரே விதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதாவது, சுவிட்சர்லாந்தப் பொருத்தவரை, முதல் கட்ட சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறை, முனிசிபாலிடிக்கு முனிசிபாலிட்டி மாறுபடும்.

ஆகவே, அப்படி முனிசிபாலிட்டிக்கு முனிசிபாலிட்டி ஒவ்வொரு நடைமுறை என்று இருந்ததை, தற்போது சீராக, ஒரே மாதிரியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலையேற்றத்தை விரும்பாதது, உள்ளூர் உயிரியல் பூங்காவைக் குறித்து அறிந்துவைத்திருக்காதது, சுவிஸ் சீஸ் பற்றி தெரியாதது ஆகிய விடயங்களெல்லாம் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடைகளாக இருந்த நிலையில், தற்போது, சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறையில், அடிப்படை அறிவு குறித்த தேர்வு, முனிசிபாலிட்டிக்கு முனிசிபாலிட்டி மாறுபடாமல், ஒரே மாதிரியாக இருக்கும்.

அதன்படி, அந்த அடிப்படை அறிவு குறித்த தேர்வில், 350 கேள்விகள் இடம்பெறும். அவை சுவிஸ் வரலாறு, பாரம்பரியம், அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளாக அமையும்.

தேர்வு எழுதுவோருக்கு 50 கேள்விகள் கொடுக்கப்படும், தேர்வில் பங்கேற்போர், அவற்றில் 30 கேள்விகளுக்காவது சரியான பதில் எழுதவேண்டும்.