நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு!

0
771

  நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கபப்ட்டுள்ளது.

இது குறித்து அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எரிபொருளை பெறுவதற்கு வேறு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும், இடையூறு விளைவிக்கும் அவசியமற்ற நபர்களை வெளியேற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் கொள்கலன்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.