மகிந்த குடும்பத்தை கூட்டிச்செல்ல இலங்கைக்கு வந்த மாலைதீவு ஜனாதிபதி!

0
582

மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் (Mohamed Nasheed) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சிக்குப்பட்ட நிலையில் காணப்படும் மகிந்தராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மாலைதீவிற்கு அழைத்துசெல்வதற்கான முயற்சிகளில் முகமட் நசீட் (Mohamed Nasheed) ஈடுபட்டுள்ளார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள நசீட் தற்போது இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள மோல்டீவ்ஸ் ஜேர்னல், சர்வதேச நிவாரணங்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் அனுபவம் இல்லாத போதிலும் அதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதுடன், மகிந்த ராஜபக்ச பாதுகாப்பாக மாலைதீவிற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக பரப்புரை செய்துள்ளார் என மோல்டீவ்ஸ் கூறியுள்ளது.

அதேவேளை மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் மகிந்த நசீட்டின் உதவியை தொலைபேசி அழைப்பில் நாடியதுடன், இலங்கையில் பதற்றநிலை தணியும்வரை மாலைதீவில் தானும் குடும்பத்தினரும் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டார் என அரசாங்க அதிகாரியொருவர் மோல்டீவ்ஸ் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார்.

  முதலில் மாலைதீவின் சுற்றுலாத்துறை பெரும்கோடீஸ்வரர் சம்பா முகமட் மூசா என்பவரின் இடத்தில் மகிந்த ராஜபக்சவை தங்கவைக்க திட்டமிட்டதாகவும், இருவருக்கும் நல்ல நெருக்கம் உள்ளது எனினும் மூசா நம்பமுடியாதவர் என்பதால் நசீட் (Mohamed Nasheed)  அதனை நிராகரித்ததாகவும் மோல்டீவ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது .

அதேவேளை சொனேவா பியுசி என்ற இடத்தில் மகிந்த ராஜபக்ச சொந்த வீட்டை வாங்கமுடியும் என்ற யோசனையை நசீட் முன்வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Gallery