திருகோணமலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
634

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக இந்த வருடம் இதுவரை 770 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

இதில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் 111 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலைத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள சுகாதார பணிமனையில் இன்று நடை பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி, குச்சவெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணங்காணப்பட்டுள்ளன. இதில் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் ஆண் (வயது – 38) ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இவ்வருடம் இதுவரை திருகோணமலைப் பகுதியில் 203 பேரும், மூதூரில் 203 பேரும், கிண்ணியாவில் 77 பேரும், உப்புவெளியில் 76 பேரும் என டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் (2021) 312 என்றவாறு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையை விடவும் இம்முறை அது 770 ஆக அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு அரசு டெங்கு வாரமாக மே 18 தொடக்கம் 24 வரை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத் தரப்புடன் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்புப் பணி இடம்பெற்று வருகின்றது.