சர்வதேசம் அங்கீகரிக்கும் அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்!

0
527

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து உடனடியாக சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அப்படியில்லை என்றால், அனைத்து தரப்பினருடன் இணைந்து கடும் முடிவு எடுக்கப்படும் என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் நடந்தவற்றை பேசுவதை நிறுத்தி விட்டு, தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையான நிர்வாக பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும்.

நாடு கோரும் மாற்றத்தை வழங்க தவறினால், முழு அரச சேவையின் ஊழியர்களும் இணைந்து அழுத்தங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச ஊழியர்களை சுதந்திரமாக மாற்றும் முதல் நடவடிக்கையாக 21 அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஷரத்தை உள்ளடக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், அரச சேவை தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் எனவும் ரோஹன டி சில்வா கூறியுள்ளார்.