“உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்கின்றோம்!” – வீரசுமன வீரசிங்க

0
732

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் அல்ல அதிக விலைக்கு கூட எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார். 

நாங்கள் உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்கிறோம். நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கும் வகையிலான வாத பிரதிவாதங்களே நாடாளுமன்றில் இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு.கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் மரணத்திற்கு ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை வெறுக்கும் வாதப்பிரதிவாதங்கள் மாத்திரமே கடந்த இருமாத காலமாக நாடாளுமன்றில்  முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலைமை நீடித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக மக்களிடம் அடி வாங்க நேரிடும் என்பதை உங்களிடம் (சபாநாயகர்) தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டேன்.

ஊழல் மோசடியில் தொடர்பற்ற நாங்களும் இன்று உயிரச்சுறுத்தலுடன் வாழ்கிறோம்.பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இருப்பதற்கு வீடுமில்லை,உடுத்த உடையுமில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் ஒவ்வொரு நாட்களும் வெறுப்புணர்வை தூண்டி விடும் வாதங்களை மாத்திரமே எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஆளும் தரப்பினரும் முன்னெடுக்கிறார்கள்.

மானிய விலையில் அல்ல அதிக விலைக்கு கூட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

பொது மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற அளவுக்கு மக்கள் அரசியல்வாதிகள் தொடர்பில் வெறுப்படைந்துள்ளார்கள்.

ஆகவே நாடாளுமன்றில் தவறான விடயங்களை குறிப்பிட்டு மக்களின் வெறுப்பினை தீவிரப்படுத்த வேண்டாம்.ஆகவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்கு முறையில் இடம் பெற்றால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.