யாழில் பாண் விற்றுத் திரும்பிய இளைஞரிடம் வழிப்பறி!

0
684

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனை செய்து விட்டு திரும்பிய இளைஞனை வாள் முனையில் அச்சுறுத்தி 15ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் – அச்சுவேலி வீதியில் கடந்த 12ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞனால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞன் அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் பகுதியில் பாண் விற்பனை செய்த பணத்துடன் குறித்த வீதி ஊடாக அச்சுவேலி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வழிப்பறி கொள்ளையர்கள் வழிமறித்துள்ளனர். 

அதனை அடுத்து இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை கொள்ளையர்கள் தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து இளைஞனை அச்சுறுத்தி அவரது பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்னவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.