குமுதினி படுகொலை 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

0
678

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தப் படுகொலை உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கிடைக்காத நிலையில், மக்கள் தமது உயிர்நீத்த உறவுகளை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவுகூர்ந்து அஞ்சலித்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படையினர், 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை நடுக்கடலில் வழிமறித்து அதில் பயணித்த குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்திருந்தனர்.

இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தவர்களிற்கு சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஞாபகார்த்தமாக சூழகம் அமைப்பினால் வழங்கப்பட்ட மரங்கள் நெடுந்தீவில் நாட்டப்பட்டதுடன் பொதுமக்களுக்கு மரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.