“தமிழர்களை கொன்ற ராஜபக்‌ஷர்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது!”

0
519

ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்‌ஷர்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது.

திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த ராஜபக்‌ஷ, கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்‌ஷச சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா.மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்‌ஷ சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.