ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு தடுப்பதை நாம் விரும்பவில்லை – வைத்தியர் க.வாசுதேவா

0
541

“ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதும் அல்லது அவசரகால நிலை சட்டங்கள் மூலம் தடுக்கப்படுவதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாம் விரும்பவில்லை” என முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபதலைவர் வைத்தியர் க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை நாட்டில் உள்ள பணவீக்கம் அந்நியச் செலாவணி நெருக்கீடு, எரிசக்தி நெருக்கீடு போன்ற பிரச்சினைகளால் நாட்டில் சகல துறைகளும் நெருக்கடியினை சந்தித்துள்ளன.

வங்கித்துறை,எரிபொருள் விநியோகம்,தனியார் வியாபார நிலையங்கள் என்பன நெருக்கடிகளை சந்திதுள்ள நிலையில் சுகாதார துறையினர் ஆகிய நாமும் மிகுந்த நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளோம். இதனால் இந்த சுகாதார துறையினை பயன்படுத்தும் பொதுமக்களும் மிகுந்த நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நிலையில் பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண விளைகின்றனர். அமைதியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதும் அல்லது அவசரகால நிலை சட்டங்கள் மூலம் தடுக்கப்படுவதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாம் விரும்பவில்லை.

எனவே மக்கள் இது தொடர்பில் விளிப்படைந்து நாட்டில் சுகாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் நாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளோம்.

நாடு முழுதும் சுகாதார துறையில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல எமது மாவட்ட வைத்திய சாலையில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடும் குறைந்த அளவிலேயே இருப்பிலும் உள்ளன அவற்றினை பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் தொடர்ந்து இந்த அரசாங்கத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் மீது எந்த சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது காலம் கடத்தப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஊழல் மிக்க அரசியல் வாதிகள் தொடர்ந்தும் பதவியில் இருக்காவண்ணம் ஆர்ப்பாட்டங்கள் மூலம் நடத்தப்படுகின்ற வேண்டுகோள் மூலம் அரசினை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு உழலில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் ஒருகாலத்தில் தண்டிக்கபட வேண்டும். பொறுப்புக்கூறும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் இவற்றை வலியுறுத்தி பொதுமக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றோம்.

நாட்டின் நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பெரு நெருக்கடியால் ஏற்பட்ட சீர்கேட்டினை பேரிடரினை தீர்க்கும் முகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கேட்டு நிக்கின்றார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.